Monday, February 20, 2012

நம் அரசியல்வாதிகளிடமிருந்து நான் கற்ற வித்தை



(இன்றைய அரசியல்வாதிகள் மேடையில் ஆளாளுக்கு ஒரு குட்டிக்கதை சொல்லி அசத்துகின்றனர். அதைப்பார்த்து நானும் இந்த குட்டிக்கதையை சொல்லத் துணிந்தேன். இதைப் படித்தவுடன் நம்ம அரசியல்வாதிகள் உங்கள் ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல மக்காஸ்...)

அந்தக் காட்டில் கிழப்புலி ஒன்று இருந்தது. அது தங்கியிருந்த இடத்தில் நிறைய எலிகள் இருந்தன. உணவைப் புலி உண்பதற்கு முன்னர் எலிகள் அதை உண்டு காலம் பிழைத்து வந்தன.

பசியால் துடித்த புலி நண்பன் நரியிடம் “ இதற்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டது. “பூனை ஒன்றை இங்கே வைத்திருங்கள்” என்றது நரி.

பூனை ஒன்றை அழைத்த புலி “நீ என்னுடனேயே இருக்க வேண்டும். எலித்தொல்லை எலித்தொல்லை தாங்க முடியவில்லை” என்றது. சூழ்ச்சி நிறைந்த அந்தப் பூனை ‘புலியின் அருகில் அதன் வேலையாளாக இருப்பது தனக்கு சிறப்பு. அப்படியே நிலைத்து இருக்கவேண்டும். அதனால் எலிகளை விரட்ட வேண்டுமே தவிர அவற்றைக் கொல்லக் கூடாது. எலிகள் இருக்கும் வரை புலியும் தன்னை அருகில் வைத்திருக்கும்’ என்று நினைத்தது.

தன் திட்டப்படியே எலிகளைக் கொல்லாமல் அவைகளை விரட்டி வந்தது. இப்படியே பல நாட்கள் சென்றன. ஒரு நாள் புலியைப் பார்த்துப் பூனை “எனக்கு இன்று விடுமுறை வேண்டும். எனக்குப் பதில் என் வேலையை என் குட்டிகள் பார்த்துக்கொள்ளும் “ என்றது.

“எலித்தொல்லை எனக்கு இருக்கக்கூடாது. வேலையை நீ பார்த்தால் என்ன? உன் குட்டிகள் பார்த்தால் என்ன?” என்றது புலி. தன் குட்டிகளை அங்கே விட்டுவிட்டுச் சென்றது பூனை.

வழக்கம் போல எலிகள் அங்கே வந்தன. பூனைக் குட்டிகள் அவற்றின் மீது பாய்ந்து ஒரு எலி விடாமல் கொன்றுபோட்டன. மறுநாள் அங்கே வந்த பூனை எல்லா எலிகளும் இறந்து கிடப்பதைக் கண்டு திகைத்தது.

கோபத்துடன் தன் குட்டிகளைப் பார்த்து “என்ன வேலை செய்துவிட்டீர்கள்? உங்களால் என் பொழப்பு போச்சே ” என்று புலம்பியது.

தாயின் பாராட்டு கிடைக்கும் என்று மகிழ்ச்சியோடு காத்திருந்த குட்டிப் பூனைகளுக்கு பெருத்த ஏமாற்றம். பரிதாபமாக தங்கள் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டன.

சில நாட்கள் சென்றன. புலி பூனையிடம் வந்து “எலிகளின் தொந்தரவு முற்றிலும் நீங்கி விட்டது. இனி உன் உதவி எனக்கு தேவையில்லை. இந்தா பிடி உன் சம்பளம்” என்று கொடுத்து அந்த பூனையை அனுப்பி விட்டது.

பூனையும் அதன் குட்டிகளும் மிகுந்த வருத்தத்துடன் அங்கிருந்து சென்றன.



டிஸ்கி: கதை புரிஞ்சுதுங்களா?............!!....ஹி.....ஹி...





.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

10 comments:

  1. ம்ஹூம்... புரியல...

    ReplyDelete
  2. எந்த கூட்டத்தினைப் பற்றி சொல்ல வருகிறீர்கள் என்றுதான் யோசித்துகொண்டிருக்கிறேன். கதை நல்லாயிருக்கு.

    ReplyDelete
  3. ஏதோ புரியற மாதிரிதான் இருக்குது துரை!

    ReplyDelete
  4. @ Philosophy Prabakaran

    - தல. நம்ம தான் மக்கள்னு வச்சிக்குவோம். சிங்கம்தான் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள். பூனைகள்தான் ஆட்சியாளர்கள். எலிகள்தான் பிரச்சினைகள். இப்போ மேட்ச் பண்ணிப் பாருங்க. ஓ.கே.வா? தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  5. @ விச்சு

    - பிரபாகரன் அவர்களின் கேள்விக்கு நான் சொன்ன பதில்தான் உங்களுக்கும். வருகைகக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  6. @ கணேஷ்

    - தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  7. கதை நல்லா இருக்கு ஆனா அரசியல வச்சி யோசிக்க முடியல .

    ReplyDelete
  8. நயமாகச் சொன்னீர்கள் அன்பரே..

    ReplyDelete
  9. நான் கொஞ்சம் மக்குன்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  10. நல்ல கதை. அருமையான பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.