Wednesday, October 12, 2011

நீங்கள் யாருக்கு சாப்பாடு போடுகீறீர்கள்?

நீங்கள் யாருக்கு சாப்பாடு போடுகீறீர்கள்?

தலைப்பைப் பார்த்ததும் உங்கள் கற்பனை எங்கே சென்றாலும் சரி. அது பற்றி எனக்கு கவலை இல்லை.

நீங்கள் வளமாய் சிந்திக்கவேண்டும். நம் சிந்தனைகள் வளம்பெற வேண்டும். அதன் மூலம் நீங்கள் பெருவாழ்வு பெற்று வாழவேண்டும் என்பதே என் நோக்கம். இந்த உடலுக்காக அதன் இச்சைகளுக்காக தீனிபோடும் எத்தனையோ வலைப்பதிவுகள் இணையத்தில் உண்டு. என்னுடைய வலைப்பதிவு வித்தியாசமாய் நம் ஆன்மாவுக்காக அந்த ஆன்மாவின் வாழ்விற்காக இருக்க வேண்டும் என்று விரும்பியே வலைப்பூவைத் தொடங்கினேன். தினமும் ஒரு நற்சிந்தனையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். நல்வாழ்வு வாழ நற்சிந்தனைகளே நமக்குத் தேவை. மன அழுத்தத்தினால் எத்தனையோ பேர் பாதிக்கப்பட்டு மன நலிவுற்று, உடல் நலிவுற்று, நோயுற்று வாழ்கின்றனர். முடிவில் தற்கொலை செய்து மாண்டு விடுவோரும் உள்ளனர். நம் வலைப்பதிவுகளை வாசிப்பவர்கள் மனநலம் பெற்று உயர்வாழ்வு வாழ வேண்டும் என்ற பெருவிருப்பத்துடன் எழுத தீர்மானித்துள்ளேன். சரி. அது போகட்டும். இன்றை நற்சிந்தனைக்கு வருவோம்.

இன்றைய தலைப்பென்ன?

நீங்கள் யாருக்கு சாப்பாடு போடுகிறீர்கள்?

நம் ஒவ்வொருவருக்குள்ளும் இரண்டு மனிதர்கள் வசிக்கின்றனர். உதாரணமாக உங்கள் பெயர் சுந்தர் என்று வைத்துக்கொள்ளுவோம். உங்களுக்குள் நல்ல சுந்தர் என்ற மனிதனும், கெட்ட சுந்தர் என்ற மனிதனும் உள்ளனர். வெளியே தெரிகிற சுந்தராகிய (அதாவது கண்களால் பார்க்கிற சுந்தர்) வெளிமனிதனாகிய சுந்தர் அவ்வளவு நல்ல ஆள் இல்லை. நல்ல ஆள் என்ன நல்ல ஆள். கெட்ட சுந்தர்தான். ஆனால உள்ளே உள்ள மனிதனாகிய (உள்மனிதன்) சுந்தர் எப்போதுமே நல்ல மனிதர்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் உபயோகப்படுத்தும் மனிதன் இந்த கெட்ட சுந்தராகிய வெளிமனிதனைத்தான். கோபம், வெறி, சண்டை, பெண் ஆசை, போக்கிரித்தனம், ரவுடித்தனம், பண ஆசை இன்னும் எத்தனை எத்தனை கெட்ட குணங்கள் உண்டோ அத்தனையும் நிறைந்தவன்தான் இந்த வெளிமனிதன். நம் உள்மனிதனை யாரும் பயன்படுத்துவதே இல்லை. அதுதான் இந்த மனிதகுலத்தின் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கிறது. மாறாக உள்ளே உள்ள உள்மனிதனோ அன்பு, பண்பு, பாசம், மனிதத்தன்மை, இன்னும் எத்தனை நல்ல குணங்கள் உண்டோ அத்தனை நல்ல குணங்களையும் உள்ளே வைத்துக்கொண்டிருக்கும் நல்ல மனிதனாவான். ஆனால் இந்த உள்மனிதனை யாரும் பயன்படுத்துவதே இல்லை. இப்போது இப்பதிவின் தலைப்பைப் பார்ப்போம். நீங்கள் யாருக்கு சாப்பாடு போடுகிறீர்கள்? உங்கள் உள்மனிதனுக்கா? அல்லது வெளிமனிதனுக்கா?

முதலில் உள்மனிதனைக் கவனிப்போம். உள்மனிதனுக்கு சாப்பாடு என்றால் நல்ல புத்தகங்களை வாசிப்பது, ஆபாச புத்தகங்களை தவிர்ப்பது, ஆபாசத் திரைப்படங்களைத் தவிர்ப்பது, தெய்வ பக்தி முதலிய நல்ல ஆகிய நல்ல காரியங்களை செய்யும்போது உங்கள் உள்மனிதனுக்கு நீங்கள் சாப்பாடு போடுகிறீர்கள். அவன் நல்ல திடமாக வளர்கிறான். உங்கள் ஆன்மாவும் வளர்ச்சி பெறுகிறது. அதன் மூலம் உங்கள் வாழ்வும் வளம்பெறும்.

மாறாக நீங்கள் உங்கள் வெளிமனிதனுக்கு சாப்பாடு எப்படி போடுகிறீர்கள் என்றால் என்ன நடக்கும்? ஆபாச புத்தகங்கள், ஆபாசத் திரைப்படங்கள், இன்டெர்நெட்டில் ஆபாசக்குப்பைகளை மேய்வது, கோபப்படுவது, மது அருந்துவது, சிகரெட் குடிப்பது, கஞ்சா, அபின் முதலிய போதை வஸ்த்துக்களை சாப்பிடுவது இன்னும் நாம் செய்யும் எத்தனையோ தீய செயல்கள் இவைதான் நம் வெளிமனிதனுக்கு சாப்பாடு கொடுக்கும் விஷயங்கள்.

நீங்கள் உங்கள் உள்மனிதனுக்கு நன்றாக சாப்பாடு போட்டு கொழுக்க வைத்தால் உங்கள் வாழ்க்கையும் செழிக்கும்.

மாறாக உங்கள் வெளிமனிதனுக்கு தொடர்ந்து சாப்பாடு போட்டு அவனை கொழுக்க வைத்தால் உங்கள் வாழ்க்கை நலிவடைந்து நாசமாய்ப் போகும்.

இப்போது சொல்லுங்கள்?

நீங்கள் யாருக்கு சாப்பாடு போடுவீர்கள்?



குறிப்பு: அடுத்த நற்சிந்தனை அடுத்த பதிவில்.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

3 comments:

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.