Wednesday, November 12, 2014

உனக்கான என் நந்தவனம்





உனக்கான என் பாதைகள்
அப்படியேதான் இருக்கின்றன
ஆனால்
நடந்து செல்ல பாதங்களைத்தான்
இன்னும் காணோம்

உனக்கான என் நந்தவனம்
அப்படியேதான் இருக்கிறது
ஆனால்
கொஞ்சிப் பேசும்
குரல் மொழிகளைத்தான்
இன்னும் காணோம்

உனக்கான என் இதயம்
அப்படியேதான் இருக்கிறது
ஆனால்
அதில் ஜீவனாய் இருந்த
உன் பிம்பங்களைத்தான்
இன்னும் காணோம்

கனவுகளெல்லாம்
நிஜங்களாகக் கூடாதாவென
நினைத்த காலங்கள் போய்
நிஜங்களெல்லாமே கனவுகளாய்ப் போன
ஒரு இலையுதிர்க் காலத்தின்
இறுதி நாட்களுக்குள்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
நானும் உன் நினைவுகளும்.