Tuesday, November 11, 2014

உணவு விஷமாதல் (Food Poisoning) – சில உண்மைகள்




உணவு விஷமாதல் என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயமாகும். இதில் அலட்சியமாக இருந்தால் நம் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்படும். மேலும் அநாவசியமான மருத்துவச் செலவுகள் ஏற்படும். இதனை தவிர்ப்பது எப்படி? என பார்க்கலாம்



உணவு விஷமாவதில் நாம் அலட்சியமாக இருக்கிறோம் என்பதே அப்பட்டமான உண்மையாகும். நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று உண்மைகளைப் பற்றி பார்ப்போம்.



1.   கண்களையும், மூக்கையும் நம்பாதீர்கள்

உங்கள் கண்களையும் மூக்கையும் நம்பாதீர்கள். உணவை வெறுமனே கண்களால் பார்த்தும், மூக்கினால் நுகர்ந்தும் பார்த்தும் பாக்டீரியா வளரவில்லை என்று முடிவு செய்துவிடாதீர்கள். இது மிகவும் தவறு. பார்க்க நன்றாக இருக்கும் ஒரு உணவு, முகர நன்றாக இருக்கும் ஒரு உணவு கெட்டுப் போகவில்லை என்று முடிவு செய்வது மிகத் தவறு. உணவைக் கெட்டுப் போகப் பண்ணுபவை நிறைய வகையான பாக்டீரீயாக்கள். அதில் ஒரு சிலவைதான் நிறத்திலும், தரத்திலும், மணத்திலும் மாற்றங்களை உண்டு பண்ணும். மற்றபடி அநேக பாக்டீரீயாக்கள் நிறத்திலும், மணத்திலும், தரத்திலும் எவ்வித மாற்றத்தையும் உண்டு பண்ணாது. ஆனால் உணவை கெடுத்து இருக்கும். முகர்ந்து பார்த்து விட்டு அல்லது கண்ணால் பார்த்து விட்டு கெட்டுப் போகவில்லை என்று முடிவு செய்து விடாதீர்கள் தயவு செய்து. உதாரணம் சல்மோனல்லா (Salmonella), இ.கோலி (E. coli) என்ற இரு வகையான பாக்டீரீயாக்கள். இவை சத்தமின்றி உணவை கெடுக்கும் மோசமான உயிரினங்களாகும்.




2.   உணவை வெறுமனே சுட வைப்பதனால் மட்டும் உணவைப் பாதுகாக்க முடியாது

ஆம். உணவை நன்றாக சுட வைத்தாகி விட்டது. இனி பயமில்லை என்று முடிவு செய்து விடாதீர்கள்.  உதாரணமாக குளோஸ்ட்ரீடியம் பெர்பிரிஞ்சன்ஸ் (Clostridium Perfringens) என்னும் உணவைக் கெட்டுப் போகப் பண்ணும் பாக்டீரியா மிக உயர்ந்த வெப்ப நிலையில் வாழும் தன்மை கொண்டது. ஆக்சிஜனே இல்லாத சூழ்நிலையிலும் வாழும் தன்மை கொண்டது. அது உணவைச் சுட வைத்தாலும் கூட செத்து விடுவதில்லை. அப்படியானால் என்னதான் செய்வது என்கிறீர்களா? அதற்கும் ஒரு வழியை கடவுள் வைத்திருக்கிறார். அதாவது மிக குளிர்ந்த ஒரு வெப்பநிலையில் இது உருவாகாவும் செய்யாது. உயிர் வாழவும் செய்யாது. ஆகவே உணவை சமைத்து இரண்டு மணி நேரத்திற்கு பின் ப்ரிட்ஜில் அல்லது மிக குளிரான ஒரு இடத்தில் வைத்திருந்தால் இந்த குளோஸ்ட்ரீடியம் பெர்பிரிஞ்சன்ஸ் என்ற பாக்டீரீயா உருவாகவும் வளரவும் வாய்ப்பில்லை. ஆகவே உணவைச் சூடுபடுத்தி விட்டோம் என்று மெத்தனமாக இருந்து விடாதீர்கள். ஆனால் சுட வைப்பதில் பெரும்பாலான பாக்டீரீயாக்கள் இறந்து விடும் என்பதும் உண்மைதான். ஆகவே சுட வைத்தபின் பிரிட்ஜில் வைப்பது சாலச் சிறந்த வழியாகும்.



3.   கை கழுவும் பழக்கம்


ஆம். உணவை சமைக்கும் முன்பும், சாப்பிடும் முன்பும், கழிவறை உபயோகிக்கும் முன்பும், பின்பும் கட்டாயம் நன்றாக சோப்பு போட்டு கைகளைக் கழுவுவது மிக ஆரோக்கியமானது. அப்படிச் செய்யும் போது எல்லா வகையான
கிருமித் தாக்குதலுக்கும் தப்பி விடலாம். நம் கைகளில் உள்ள நோய்க் கி
ருமிகளே நம் பெரும்பாலான உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது என்கிறது மருத்துவ அறிவியல். ஆகவே சமைக்கும் முன்பு நன்றாக கைகளைக் கழுவி விடுங்கள். இதிலும் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால் குறைந்தது இருபது விநாடிகள் நன்றாக சோப் போட்டு கைகளை அலசுவதே உண்மையான கை கழுவுதல் ஆகும் என்று மருத்துவ அறிவியல் தெரிவிக்கிறது. அல்லாமல் சும்மா ஏதோ நாமும் கை கழுவினோம் என்று கைகளை தண்ணீரில் கழுவினீர்கள் என்றால் வேறு ஒன்றுமில்லை. நோய்க்கிருமிகளின் படையெடுப்புக்கு நீங்களே அழைப்பு விடுக்கிறீர்கள் என்றே அர்த்தமாகும்.



ஆகவே மேற்கூறிய மூன்று டிப்ஸ்களையும் பயன்படுத்தி உணவு கெட்டுப் போகாமல் பாதுகாத்து நன்றாக உண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.



வாழ்க நலமுடன்!



.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

3 comments:

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.